வீட்டில் தனிமை படுத்திக்கொள்ள
அவசியமான வேண்டுகோள்
நம்மில் யாருக்கேனும்
காய்ச்சல் / சளி / இருமல் / தொண்டை வலி இருந்தால் கட்டாயம் அறிகுறி ஆரம்பித்ததில் இருந்து பத்து நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல்
முடிந்தால் வீட்டுக்குள்ளேயே மற்றவர்களுடன் அருகில் இல்லாமல் தனிமையில் இருப்பது சிறந்தது.
இதற்குப் பெயர் ISOLATION
அதாவது வந்திருக்கும் நோய் இன்னதென்று அறியாத நிலையில் கூட தனது நோய் பிறருக்கு பரவிவிடக்கூடாது என்பதற்காக செய்யப்படும் முக்கிய செய்கை இது
இது பொதுநலன் குறித்த விசயம்.
மேலும் அதே வீட்டில் இந்த அறிகுறிகளுடன் இருப்பருடன் நேரடி தொடர்பில் இருந்த அந்த வீட்டார்களும் அதே போன்று வெளியே செல்லாமல் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது மிகவும் நன்று
இதற்குப் பெயர் QUARANTINE
இதுவும் பொதுநலன் சார்ந்த காரியம்
யாரேனும் தங்களது வீட்டுக்கு விருந்தாளியாக வருவதாக தெரிவித்தாலும்
தங்களின் வீட்டில் நோயின் அறிகுறியுடன் ஒருவர் இருப்பதால் இப்போதைக்கு வீட்டிற்கு வரவேண்டாம் என்று அன்புடன் கூறலாம்
இதிலும் பொதுநலன் உண்டு.
அடுத்து முக்கிய தேவைக்காக வெளியே செல்ல வேண்டி வந்தால்
கட்டாயம் முகக்கவசம் அணிவது.
இது தன்னிடம் நோய் தொற்று இருந்தால் அது பிறருக்கு பரவுவதை தடுக்கவே பெரும்பாலும் பயன்படுகிறது
சமூகத்தில் பெரும்பான்மை மக்கள் முகக்கவசம் முழுமையாக அணியும் போது மட்டுமே அதனால் சமூகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.
சிலர் மட்டும் அணிந்து சிலர் அணியாமல் இருந்தால்
அணியாமல் இருப்பவர்களிடம் இருந்து மாஸ்க் அணிந்திருப்பவர்களுக்கும் பரவும் வாய்ப்பு இருக்கிறது.
இதுவும் பொதுநலன் சார்ந்த காரியம் தான்.
அடுத்து அறிகுறிகள் இருப்பவர்கள் அல்லது கடந்த பத்து நாட்களுக்குள் காய்ச்சல் /இருமல் / தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தோன்றியவர்கள்
திருமண நிகழ்ச்சி , காதுகுத்து, நிச்சயதார்த்தம், கோவில் திருவிழா , கூட்டுப்பிரார்த்தனைகள், பொதுப்போக்குவரத்தில் செல்வது போன்றவற்றை தவிர்ப்பது என்பதும் பொதுநலன் சார்ந்த காரியம்
மேற்சொன்ன அத்தனை பொதுநலன் சார்ந்த காரியங்களில் ஒன்று கூட முறையாக நமது சமூகத்தில் நடப்பதில்லை என்பதை வேதனையுடன் பதிவு செய்கிறேன்
மிகவும் பொறுப்பற்ற சமூகமாக நாம் மாறி வருவதை கண்கூடாக காண முடிகிறது
ஏழைகள் அன்றாடங்காச்சிகள் தங்களது அன்றாட பிழைப்புக்கு கட்டாயம் வெளியே வந்து உழைப்பதை நியாயமாக ஏற்றுக்கொள்ள முடியும்.
ஆனால் அனைத்தும் இருந்தும்
நோயின் அறிகுறிகள் தோன்றியவர்கள் கூட
திருமணங்கள்
வைபவங்கள் என்று முகக்கவசம் அணியாமல்
கைகளை கழுவாமல் தொடர்ந்து தொற்றை அடுத்தவருக்கு பரிசளித்துக்கொண்டு இருக்கிறார்கள்
சொந்தங்களே நண்பர்களே
உங்களுக்கு நோய் தொற்று இருந்தால் அதற்கு பரிசோதனை செய்து கொள்வது
கொள்ளாமல் இருப்பது
சிகிச்சை எடுப்பது எடுக்காமல் போவது..
உங்களது சுயநலன் சார்ந்தது
அது உங்கள் உரிமையும் கூட...
ஆனால் அந்த தொற்றை பிறருக்கு பரப்புவதற்கு உங்களுக்கு உரிமை கிடையாது..
தேவையற்ற பயணங்களை தவிருங்கள்
அறிகுறிகள் தோன்றினால் வீட்டில் இருங்கள்.
முகக்கவசம் அணியுங்கள்
கைகளை சோப் போட்டு கழுவுங்கள்
இன்னும் கொரோனாவினால் ஒட்டப்படும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் குறைந்தபாடில்லை
புரிந்து கொள்ளுங்கள்
நன்றி
Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
Comments
Post a Comment
Thank you we will call back later